உதட்டிலே உரைத்திடும் உண்மைகள்,
இதயத்தில் வெறுமையின் பொய்மைகள்.
களவுக்கும் கொடுமைக்கும் பஞ்சமோ..!
படைப்பவன் பெயராலும் இது தொடருதே......
படித்தவர் பெரியவர் யாவரும்
பணத்துக்காய்ப் படுகுழி வீழ்கிறார்.
உயர்ந்த நல்லெண்ணத்தைக் கொண்டவர்
என்றிங்கு எவரையும் காண்கிலேன்.
நிஜம் காணா நிலை மாறும் வாழ்விலே
நிரந்தர சுகம் எதில் உள்ளது..?
விடைதேடி அலைகின்றோம் யாவரும்
இன்பத்தின் உண்மையை அறியாமல்.
மறை சொன்ன சத்திய வழியிலே
மாறாது வாழ்ந்திட்ட உத்தமர்
எதுவந்த போதிலும் அன்பினை
மாறாத சொத்தெனக் கொண்டனர்.
கலைவாழ்வில் இன்பத்தைக் காணலாம்.
கருணையில் இன்பத்தைக் காணலாம்.
நிலையான கல்வியைத் தேடினால்
நித்தமும் இன்பத்தை நுகரலாம்.
குறைகாணா மெய்யன்பு உள்ளத்தில்
கறையற்றுப் பெருகிடும் மனமுள்ளோர்
நிறைவான இன்பத்தின் எல்லையில்
நிலைத்திட்ட மெய்வாழ்வைப் பெறுவரே..!!
Nessun commento:
Posta un commento