நண்பா..!
ஏன் எனைக்
கொன்றிடத் துணிந்தாய்..?
நான் இறந்தாலிங்கு
நீ இறப்பாயே
தலையசைத்தே
உனக்குத்
தண்ணீர் தந்தேன்.
தகிக்கும் பொழுதினில்
நிழலைத் தந்தேன்
சுவாசிக்க
உயிர்க் காற்றினைத்
தந்தேன்
சூழலைக்
குளுமையாய்
மாற்றியும் தந்தேன்
என் தோழன்
கார்மேகனனை
இழுத்து வந்து
இருப்போர்க் கெல்லாம்
உணவைக் கொடுத்தேன்.
வேறென்னக் கொடுமைகள்
நான் இங்கு செய்தேன்
நண்பா..ஏன் எனைக்
கொன்றிடத் துணிந்தாய்..?
போகட்டும்..
உனக்காகத் தானிங்கு
நானே
இறந்தாலும்
உன் உறவாகவே
எந்நாளும் இருப்பேனே.
உன் பிள்ளைக்கு நானே
தொட்டிலும் ஆவேன்
உன்க்கென நானே
கட்டிலும் ஆவேன்
உன் வீட்டுக்கு
நல்ல கதவென
இருப்பேன்.
நீ இசைத்திட
ஒரு இசைக் கருவியும்
ஆவேன்.
நீ இறந்திட்டால்
உனை சுமக்கும்
பெட்டியுமாவேன்.
இல்லையேல்
உனை எரிக்க
விறகுமாவேன்
என் கடன் எப்படியாயினும்
தீரும் ..ஆனால்
உன் கடன் தீர்த்திட
நீ வேண்டும் நண்பா..!
ஆகையினால் தான்
வேண்டுகிறேன் உனை
விட்டு விடேன்
சில காலம் என்னை
உன் இனத்தை
வாழ்விக்க
என் இனத்தை
விருத்தி செய்தப் பின்
நானே ....
விரும்பி சாகிறேன்....!
Nessun commento:
Posta un commento